நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய காட்டெருமையை வனத் துறையினர் வியாழக்கிழமை விரட்டினர்.
உதகை படகு இல்லத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள பசும்புற்களை மேய்வதற்காக காட்டெருமைகள் கூட்டமாக இரவு நேரங்களில் வந்து செல்கின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை பகலில் ஒற்றை காட்டெருமை படகு இல்ல வளாகத்துக்குள் நுழைந்துள்ளது. ஏரிக்கரையோரம் படகு சவாரியில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் காட்டெருமையைப் பார்த்து அச்சமடைந்தனர்.
அப்போது சிலர் செல்லிடப்பேசியில் அதை சுயபடம் எடுக்கவும் முயற்சித்துள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த காட்டெருமை படகு சவாரியில் ஈடுபட்டிருந்த சுற்றுலாப் பயணிகளை நோக்கி ஏரித் தண்ணீருக்குள் பாய்வதற்கு முயற்சித்துள்ளது. அப்போது, படகிலிருந்த சுற்றுலாப் பயணிகள் சப்தம் போட்டனர். இவர்களின் அலறல் சப்தம் கேட்டு பூங்காவில் பணியிலிருந்த வனத் துறையினர் அப்பகுதிக்கு ஓடிச் சென்று காட்டெருமையை ஏரிக்கரையிலிருந்து துரத்தினர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் காட்டெருமை அங்கிருந்து சென்றது.