கோடை சீசனையொட்டி தோட்டக் கலைத் துறை சார்பில் 2-ஆவது விழாவான ரோஜா மலர்க் காட்சி உதகை அரசினர் ரோஜா பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது.
உதகையில் 16ஆவது ஆண்டாக நடைபெறும் ரோஜா மலர்க் காட்சியில் 25,000 ரோஜா மலர்களைக் கொண்டு 12 அடி நீளத்திலும், 16 அடி உயரத்திலும் "இந்தியா கேட்' வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளைக் கவரும் வகையில் 5,000 ரோஜா மலர்களாலான சோட்டா பீம் உருவ அமைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோஜா இதழ்களைக் கொண்டு ட்வீட்டி கார்ட்டூன் ரங்கோலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், மதுரை மாவட்ட தோட்டக் கலைத் துறை சார்பில் 6,000 ரோஜா மலர்களைக் கொண்டு ஜல்லிக்கட்டு காளை உருவ அமைப்பும், ஈரோடு மாவட்டம் சார்பில் 6,000 ரோஜா மலர்களால் மயில் அமைப்பும், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் 5,000 ரோஜா மலர்களைக் கொண்டு படகு அமைப்பும், திருநெல்வேலி மாவட்ட தோட்டக் கலைத் துறை சார்பில் 2000 ரோஜா மலர்களைக் கொண்டு கல்யாண மாலை மற்றும் ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரித்த திருநெல்வேலி ரோஜா அல்வா அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 53 போட்டியாளர்கள் பங்கேற்று பல்வேறு ரோஜா மலர்களையும், ரோஜா மலர் அலங்காரங்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த ரோஜா மலர்க் காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், சிறந்த ரோஜா பூங்காவிற்கான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள நிறைவு விழாவில் பரிசளிக்கப்படுகிறது.
ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட சோட்டா பீம், "இந்தியா கேட்' மாதிரித் தோற்றம், தோகை விரித்தாடும் மயில்.