புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான பாடநூல்கள் மே 23-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான மாநிலப் பாடத் திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உருவான புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கடந்த மே 4-ஆம் தேதி வெளியிட்டனர்.
இதையடுத்து வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆர்டி) வலைதளத்தில் மே 23-ஆம் தேதி முதல் படிப்படியாக வெளியிடப்படவுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: மாணவர்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் புத்தகத்தில் உள்ள பாடங்களை படித்துக் கொள்ளவும், பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ளவும் வசதியாக, இணைய தளத்தில் புதிய பாடத் திட்ட நூல்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கான பாடங்களைwww.tnscert.org என்ற வலைதளத்தில் மே 23-ஆம் தேதி முதல் படிப்படியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் புத்தகங்களில் உள்ள தகவல்களைக் காட்டிலும் கூடுதல் தகவல்கள் இடம்பெறும்.