காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பா?: அன்புமணி இராமதாஸ் ஆவேசம் 

காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பைக் காட்டி ஏமாற்றத் துடிப்பதா என்று தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பா?: அன்புமணி இராமதாஸ் ஆவேசம் 

சென்னை: காவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பைக் காட்டி ஏமாற்றத் துடிப்பதா என்று தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றுவதற்கான இந்தத் திட்டத்தை தமது சாதனை போல காட்டிக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி நாடகமாடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

சேலத்தின் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமது கோரிக்கையை ஏற்றே கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த  பிரதமர் ஒப்புக்கொண்டதாக பெருமிதம் பேசியிருக்கிறார். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் குறித்து தம்மைப் போலவே தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அத்திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் பழனிச்சாமி முயன்றிருக்கிறார்.

கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் புதியத் திட்டம் அல்ல; அத்திட்டம் குறித்து பேசப்படுவது  இது முதல் முறையும் அல்ல; இதற்கெல்லாம் மேலாக கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் அரசியல் காரணங்களுக்காக சாத்தியமாகாத திட்டம் என்பது தான் உண்மை என்பதை முதல்வர் உணர வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்பது பற்றி 1970-ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதே திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அப்போதே அந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. அப்போதும், அதற்குப் பிறகும் எப்போதெல்லாம் காவிரிப் பிரச்சினையில் துரோகம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தை ஆசைகாட்டி ஏமாற்றுவதற்கான கருவியாக மட்டுமே இத்திட்டம்  பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால், ஒருமுறை கூட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு வந்ததில்லை.

இப்போதும் கூட, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வரும் நிலையில்,  கொந்தளித்துள்ள தமிழ்நாட்டு மக்களையும், உழவர்களையும் சமாதானம் செய்வதற்காகத் தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்வைக்கிறது.

முதல்வர் பழனிச்சாமி தமிழக மக்களின் பிரதிநிதியா... மத்திய ஆட்சியாளர்களின் பிரதிநிதியா? தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுகிறாரா... மத்திய ஆட்சியாளர்களைக் காப்பாற்ற அவர் பாடுபடுகிறாரா? என்ற வினாக்களுக்கு அவரது இந்த நிலைப்பாடே பதிலளிக்கும்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட எந்த நதிகள் இணைப்புத் திட்டத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சி எதிரி அல்ல. இன்னும் கேட்டால் நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆனால், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் பலரும் எதிர்பார்ப்பதைப் போல அவ்வளவு எளிதானது அல்ல. இது 5 மாநிலங்கள் சம்பந்தப்பட்ட திட்டம் ஆகும். மராட்டிய - சத்தீஸ்கர் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதியில் அணை கட்டி, அதில் தேங்கும் தண்ணீரை தெலுங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு  கொண்டு செல்லவேண்டும். அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, நாகர்ஜூனா சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்பட்டு, சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரிக்கு தண்ணீரைக் கொண்டு செல்வது தான் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் ஆகும். கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெறுவதே சாத்தியமாகாத நிலையில், கேட்பதற்கே தலைசுற்றும் இந்தத் திட்டத்தை  தமிழகம் தவிர்த்த 4 மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது சாத்தியமா? என்பதை தமிழ்நாட்டு மக்களும், வேளாண் பெருமக்களும்  முடிவு செய்து கொள்ளலாம்.

கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் குறித்து பேச்சு எழுந்ததுமே, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 45 கிராமங்கள் மூழ்கி விடும்; 70 ஆயிரம் பேர் சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறி தெலுங்கானா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒருவேளை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும்கூட கோதாவரி நீர் 3 மாநிலங்களைக் கடந்து தான் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதால், இப்போது கர்நாடகத்துடன் மட்டும் போராடும் தமிழகம், இனி 3 மாநிலங்களுடன் போராட வேண்டியிருக்கும். தென்னிந்திய நதிகள் அனைத்தும் இணைக்கப்படும் போது வேண்டுமானால் கோதாவரி- காவிரி இணைப்பால் தமிழகத்திற்கு பயன்கிடைக்கலாம். அதற்கு முன்பாக இந்த திட்டம் குறித்து பேசுவதெல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவதைப் போன்றதே.

குறுவைப் பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால் பாசன மாவட்டங்களில் பேரழிவு காத்திருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான். இதை செய்யாமல் மத்திய ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக மாறி தமிழக மக்களை ஏமாற்றும் சதியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடக்கூடாது. மாறாக மத்திய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com