சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரால் அமைக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம், தனது விசாரணை அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்தார்.
கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி குறித்து விசாரிக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்டவர்களிடம் முழுமையான விசாரணை நடத்திய சந்தானம் தனது அறிக்கையினை தயாரித்து வந்தார். அவர் வரும் 15-ஆம் தேதியன்று அவர் தனது அறிக்கையை ஆளுநரிடம் ஒப்படைப்பார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சந்தானம் தற்பொழுது தனது விசாரணை அறிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் இந்த விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சந்தானத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும். விசாரணை அறிக்கையானது சீலிடப்பட்ட கவர் ஒன்றில் வைக்கப்பட வேண்டும். இது ஊடகங்கள் உள்ளிட்ட யாருக்குமே அளிக்கப்படக் கூடாது என்று உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது