மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சிலை முறைகேடு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு வந்த இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் தனபாலை ஒரு வாரத்திற்கு கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி மலைக்கோயிலில் மூலவர் சிலை முன்பு நிறுவப்பட்ட அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் பழனியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் ஏற்கெனவே, தலைமை ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் கைதாகி ஜாமீனில் வந்துள்ளனர். திருத்தணி கோயிலின் ஓய்வு பெற்ற இணை ஆணையர் புகழேந்தியும், தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரனும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாததால் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து சிலை தடுப்பு போலீஸார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், தனபாலின் முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அதுதொடர்பாக பதிலளிக்க அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து விசாரணையை ஒருவாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதி அதுவரை தனபாலை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.