தனியார் பள்ளிகளில் நலிவடைந்த, ஏழை குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் இலவச சேர்க்கை பெற ஆன்லைன் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்காக கடந்த ஏப்.20-ஆம் தேதி முதல் பெற்றோர் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில் இலவச சேர்க்கைக்காக இதுவரை (வியாழக்கிழமை) ஒரு லட்சத்து 9,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச சேர்க்கை பெற விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு அவற்றைச் சரிபார்க்கும் பணிகள் மே 21-ஆம் தேதி முதல் நடைபெறும். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும். அதில் வாய்ப்பு பெற்ற பிள்ளைகளுக்கு மே 29, 30 ஆகிய தேதிகளில் பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படும். இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தைகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம். இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய பெற்றோர் தேவையான ஆவணங்களுடன் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் (ஐஎம்எஸ்) அலுவலகம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், அனைத்து தனியார் பள்ளிகளிலும் பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.