சென்னை: சனிக்கிழமை காலை, சென்னையில் மூன்று வெவ்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததன் எதிரொலியாக, செயின் பறிப்பில் ஈடுபடுவோரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளையும், குற்றவாளிகள் பயன்படுத்திய வாகன எண்களையும் காவல்துறையினர் நேற்று பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டனர்.
சென்னையில் சனிக்கிழமை காலை கேகே நகர், விருகம்பாக்கம், வடபழனி பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சம்பவங்களிலும், அடையாளம் தெரியாத இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இந்த விடியோவில் பதிவான வாகன எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், புதிய குற்றவாளிகளே செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இதில் 80 முதல் 90 சதவீத குற்றவாளிகள் சிறார்கள். அவர்களை பிடித்தாலும் சிறையில் தள்ள முடியாது. சிறார் காப்பகங்களில்தான் தங்க வைக்கப்படவார்.
சராசரியாக தினந்தோறும் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் காவல்நிலையங்களில் புகார்களாக பதிவாகின்றன. இதில் பாதிக்கப்படுவர்கள் பெரும்பாலும் பெண்களாகவோ முதியவர்களாகவோ உள்ளனர். 2017ல் மட்டும் 616 செயின் பறிப்பு, 520 செல்போன் பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்னள என்று கூறினார்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு, பொது மக்களை தாக்கி செயின் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பிகாரைச் சேர்ந்த 24 வயதாகும் அம்புஜ் குமார், மதுரவாயலில் நடந்து சென்ற போது, அவரை வழிமறித்த 3 பேர் ஆயுதங்களால் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துச் சென்றனர்.
இதே குற்றவாளிகள், அதே பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த சித்தார்த் (22) என்பவரை கூர்மையான கம்பியால் தலையில் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துச் சென்றனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தார்த் தற்போது குணமடைந்து வருகிறார்.
இவ்விரண்டு சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் காவல்துறையினர், ஷங்கர், சேகர், மணிகண்டன் என்ற இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.