தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகவுள்ளன.
தேர்வு முடிவு வெளியான சில நிமிடங்களில் பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ-மாணவிகள் எழுதினர். இதுதவிர தனித்தேர்வர்களாக 36,649 பேர் தேர்வில்
பங்கேற்றனர்.
இத்தேர்வு முடிவுகள் tnresults.nic.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
100 -க்கு 100 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுமா? கடந்த மே 16 -ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட புள்ளி விவரப் பட்டியலில் ஒவ்வொரு பாடங்களிலும் எத்தனை மாணவர்கள் 200 -க்கு 200 மதிப்பெண் பெற்றிருந்தனர் என்ற தகவல் அளிக்கப்படவில்லை. அந்தப் பாடங்களில் குறைவான மாணவர்களே முழு மதிப்பெண் பெற்றிருந்ததால் பட்டியல் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 -க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.