ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 6 மாத அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு டிச. 5- இல் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பலரும் சந்தேகம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்.25-இல் தமிழக அரசு வெளியிட்டது. விசாரணை ஆணையத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.
இதில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன், திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன், ஜெ. தீபா, தீபக், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், மருத்துவர் தினேஷ் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 24 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், கூடுதலாக 6 மாதம் அவகாசம் வழங்கக் கோரி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.