பெட்ரோல் விலை உயர்வுக்கு வெளிநாடுகள் மீது மத்திய அரசு பழிசுமத்தக் கூடாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: கர்நாடகத் தேர்தல் நடைபெற்றபோது பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது வரலாறு காணாத வகையில் உயரத் தொடங்கியுள்ளது. இதற்கு உலகச் சந்தையைக் காரணம் காட்டுகிறார்கள். உலகச் சந்தையில் எவ்வளவு உயர்ந்தாலும், அதைக் குறைப்பதற்கு இங்கு வழியுண்டு. நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்துவிட்டு, வெளிநாடுகள் மீது பழியைச் சுமத்தி, மக்களைச் சமாதானம் செய்வது சரியல்ல.
மீனவர்களுக்கு என்னென்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை அரசு செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே அறிவித்த பல திட்டங்களே இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அதைச் செய்யாமல் புதிய திட்டங்களை அறிவிப்பதால் பயன் இல்லை.
கோவையில் அடுத்த மாதம் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்ள உள்ளார். அதற்காக அவரைச் சந்தித்து அழைப்பு விடுத்தேன். எந்தத் தேதி என்பதை அவர் முடிவு செய்து கூறுவார். கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகளுடான என் நட்புச் சூழல் நன்றாக உள்ளது. ஆனால், இங்குள்ள சூழல் வேறு விதமாக உள்ளது. அந்தச் சூழல் மாறும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.
பின்னர், மயிலாப்பூர் வாரண்ட் சாலையில் உள்ள மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் இல்லத்துக்கு கமல்ஹாசன் சென்றார். பாலகுமாரனின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.