சென்னை: பொதுமக்கள் மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. இன்று காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டகாரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் 11 பேர் பலியான தகவல் அறிந்து நான் துயரம் அடைகிறேன். அவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துளளார்.