ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளதால், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, சில வாகனங்களுக்கு தீ வைத்ததால் வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்களை வெளியேற்ற, அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால், போராட்டம் வன்முறையில் முடிந்தது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தனை ஆயிரம் மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் முக்கியச் சாலைகளைப் பயன்படுத்தாமல், சுமார் 6 கி.மீ. தூரம் பேரணியாக வந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திட்டமிட்டபடி முற்றுகையிட்டுள்ளனர்.
கண்ணீர் புகை வீசும் வாகனத்தையே, போராட்டக்காரர்கள் அடித்து விரட்டியதையும் காண முடிந்தது.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் முக்கியச் சாலைகளில், முள் மரங்களை வெட்டிப் போட்ட போராட்டக்காரர்கள், வாகனங்கள் வர முடியாமல் மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.