தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்குத் தீ வைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், கடும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கும்பலாக, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்குச் சென்று, குடியிருப்புகளுக்கு தீ வைத்தனர்.
தகவல் அறிந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பிரிந்திருந்த போராட்டக்காரர்கள், திடீரென ஒன்றுதிரண்டு ஒரே பகுதியில் சென்று போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகிறார்கள்.