தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று தீவிரமடைந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக சுமார் 2000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மடத்தூரில் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்ற மடத்தூர் கிராம மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை அமைத்து கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மாவட்ட நிர்வாகம். தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கூடியுள்ளனர்.
தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.