தூத்துக்குடி கலவரத்தையடுத்து சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் டிஜிபி அலுவலக பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது கலவரம் ஏற்பட்டது.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று தூத்துக்குடி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி கலவரத்தையடுத்து சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் டிஜிபி அலுவலக பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 இணை ஆணையர்கள் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.