சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விடியோவில் கருத்துக் கூறிய சின்னத்திரை நடிகை மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டமானது செவ்வாயன்று நூறாவது நாளை எட்டியது. செவ்வாய் காலையில் இருந்தே தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்தனர். தடைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டதால், காவலதுறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் செவ்வாயன்று 11 பேரம், இன்று ஒருவரும் என மொத்தம் 12 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிரபல தனியார் சேனலில் தொலைக்காட்சித் நெடுந்தொடரில் நடித்து வரும் நடிகை நிலானி வீடியோ ஒன்றை செவ்வாயன்று வெளியிட்டுள்ளார். இந்த விடியோவில் அவர் தான் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் போலீஸ் வேடத்திலேயே பேசியுள்ளார்.
அதிலும் தூத்துக்குடி சம்பவத்தைப் பற்றிப் பேசும் போலீஸ் உடை அணிந்திருப்பது கூசுகிறது என்றெல்லாம் விடியோவில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ரிஷி என்பவர் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் சின்னத்திரை நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
419 (ஆள் மாறாட்டம் செய்து அல்லது வேறொரு நபராக நடித்து ஏமாற்றுவது), 153(வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது), 500 (அவதூறு உண்டாக்கும் வகையில் பேசுதல், பதிவிடுதல்), தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66d (ஆள்மாறாட்டம் மூலம் அல்லது வேறொரு நபராக நடித்து ஏமாற்றி அதை வலைதளங்களில் பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது