தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர். 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.