தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாழும் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கலவரப் பூமியான தூத்துக்குடியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் ஒன்று திரளும் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் ஒலிப்பெருக்கிகள் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள்.
அதில், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டுக்குள் இருக்குமாறு மிக அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுப்பதால், தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். மாவட்டத்தில் அமைதி நிலவ, மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் ஒலிப்பெருக்கிகள் மூலம் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே, தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்கிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.