பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அத்துடன், ஒட்டுமொத்தமாக 93.36 சதவீத மாணவ, மாணவியர் இவ்வாண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளிகளைச் சேர்ந்த 2,765 மாணவர்கள், 3,143 மாணவியர் என மொத்தம் 5,908 பேர் தேர்வை எழுதினர்.
அதில், 2,502 மாணவர்கள், 3,014 மாணவியர் என மொத்தம் 5,516 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.36 ஆகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.26 சதவீதம் அதிகமாகும். இதில், 450 மதிப்பெண்ணுக்கு மேல் 40 பேரும், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 416 பேரும் பெற்றுள்ளனர்.
30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி: கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, சூரிய நாராயணன் தெரு, வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கொய்யாதோப்பு, வால்டாக்ஸ் சாலை, குக்ஸ் ரோடு, திருவேங்கடசாமி தெரு, ஸ்டாரன்ஸ் சாலை, படவேட்டம்மன் கோயில் தெரு, புல்லா அவென்யூ, கீழ்ப்பாக்கம், மெக்னீக்கல்ஸ் சாலை, திருவள்ளுவர்புரம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, இருசப்பன் தெரு, ஆழ்வார்ப்பேட்டை, வி.பி.கோயில் தெரு, தேனாம்பேட்டை, கேனால் பேங்க் சாலை, கே.பி.சாலை, ரங்கராஜபுரம், கன்னியப்பா நகர், ஜாபர்கான்பேட்டை, கோயம்பேடு, கோட்டூர், ஆஞ்சிநேய நகர் தெலுங்கு உயர்நிலைப் பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை உருது உயர்நிலைப் பள்ளி ஆகிய 30 உயர்நிலைப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரையும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் த.கார்த்திகேயன், துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தினர்.