ஒருவர் உங்களை அடிக்கிறார்.. நீங்கள் தடுப்பீர்கள்.. அதுபோலவே துப்பாக்கிச் சூடு: முதல்வர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
ஒருவர் உங்களை அடிக்கிறார்.. நீங்கள் தடுப்பீர்கள்.. அதுபோலவே துப்பாக்கிச் சூடு: முதல்வர்


சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதிலில், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்ந்து அமைதியாகவே நடத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த செவ்வாயன்று நிலைமை அப்படியில்லை. சில சமூக விரோதிகள் ஊடுருவி, மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகதில் இருந்த வாகனங்களுக்கும், ஆலை ஊழியர் குடியிருப்புக்கும் தீ வைத்தனர். இதை எல்லாம் நானும் உங்களைப் போல இங்கே இருந்து தொலைக்காட்சி மூலமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். 

ஒருவர் உங்களை அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  தடுக்கப் பார்ப்பீர்கள். ஒருவர் தாக்கும் போது தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுப்பது இயற்கையே. இதைத்தான் காவல்துறை செய்துள்ளது என்று கூறினார்.

மேலும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதிட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் சில அரசியல் கட்சிகளும், சமூக விரோதிகளும் தவறாக வழிநடத்தியதால் இந்த நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

சென்னையில் இன்று தலைமைச் செயலகத்தில், முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான திமுகவினர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து மறியல் போராட்டம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, இன்று தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நானும் ஸ்டாலினும் எதிரெதிரே தான் அமர்ந்திருந்தோம். ஆனால், ஸ்டாலின் திடீரென கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அலுவல் ஆய்வுக் கூட்டம் முடிந்து வெளியே வந்த பிறகுதான், ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதும், அவரை சந்திக்க முதல்வர் மறுத்ததால், அறையில் தர்னா நடத்தப்பட்டதாகவும் செய்திகளைப் பார்த்தேன். 

அவர் என்னை சந்திக்க வேண்டும் என்றால் அலுவல் ஆய்வுக் கூட்டத்துக்கு வரும்போதே கூறியிருக்கலாம். மனுவை கொடுத்திருக்கலாம். ஆனால், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இருந்து திடீரென வெளியேறி, நான் அவரை சந்திக்க அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறி மறியலில் ஈடுபட்டு கைதாகியுள்ளார்.

நான் அவரை சந்திக்க மறுப்பு தெரிவிக்கவேயில்லை. தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாக வேண்டும் என்பதற்காக அவர் நாடகம் நடத்தியுள்ளார். ஊடகங்களில் பரபரப்பு வர வேண்டும். அரசியல் நாடகம் நடத்துவதற்காக என் அறை முன்பு தர்னா நடத்தியுள்ளார் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com