பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாவட்டத்தில் 194 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தில் 587 பள்ளிகளிலிருந்து 50,135 மாணவர்கள் எழுதினர். அதில் 47,225 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.20 ஆகும். ஆனால் கடந்த ஆண்டு 93.86 சதவீதம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தில் தேர்வு எழுதிய பள்ளிகளில் 194 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள 28 அரசுப் பள்ளிகளில் இருந்து 2,968 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 2,687 மாணவர்கள் 90.53 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,195 மாணவர்கள் தேர்வு எழுதியதில்,11,924 மாணவர்கள் 90.37 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆசிர்வாதபுரம் அரசு முஸ்லிம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கொடுங்கையூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98.65 சதவீதமும், ராயப்பேட்டை அரசு ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 97.96 சதவீதமும், விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.30 சதவீதமும், சூளைமேடு ஜெய்கோபால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 97.20 சதவீதமும், அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி 96.67 சதவீதமும், எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப் பள்ளி 95.95 சதவீதமும், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி 95.65 சதவீதமும், வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி 95.03 சதவீதமும், தியாகராயநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 94.74 சதவீதமும் பெற்றுள்ளன.