தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக "டிராய்' கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் 100 சேனல்களை ரூ.130-க்கு வழங்க வேண்டும் என தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்காக அனைத்து விநியோகஸ்தர்களும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, வரைவு விதிகளை டிராய் வெளியிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்தப் புதிய கட்டணம் மற்றும் புதிய விதிகளை கடந்த மார்ச் 3-ஆம் தேதி "டிராய்' வெளியிட்டது.
இந்த புதிய விதிகளை எதிர்த்து ஸ்டார் இந்தியா நிறுவனம் மற்றும் விஜய் டெலிவிஷன் நெட்வொர்க் நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தது.
மாறுபட்ட தீர்ப்பு...இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கில் "டிராய்' சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ப.சிதம்பரம், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் வழங்கினர்.
பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் சேனல்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து
"டிராய்' கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், அவ்வாறு விதிகளை உருவாக்க டிராய்க்கு அதிகாரம் இல்லை. விதிகளை உருவாக்கியது சட்டத்துக்குப் புறம்பானது என நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்து.
3-ஆவது நீதிபதி...இதன்படி இந்த வழக்கினை 3-ஆவது நீதிபதியான எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கான கட்டண விகிதங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் "டிராய்'க்கு உள்ளது.
எனவே, இதுதொடர்பாக "டிராய்' கொண்டு வந்துள்ள புதிய விதிகள் செல்லும். எனவே, இந்த வழக்கில் தலைமை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்றுக்கொண்டு, அதனை உறுதி செய்வதாக அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.