தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் வரும் 27 -ஆம் தேதி வரை இணைய சேவைகளை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்களை அனைத்து இணையதள சேவை வழங்குநர்களுக்கும் மாநில அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து இணையதள சேவை வழங்குநர்களுக்கு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (மே 22) நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அதில் சில மக்கள் மரணம் அடைந்தனர்.
போராட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினர். பொதுமக்கள் இந்த அளவுக்கு கூடுவதற்குக் காரணம் சமூக ஊடகங்களின் வழியாக பரப்பப்பட்ட தகவல்கள்தான்.
பொதுமக்களை கிளர்ந்தெழச் செய்யும் வகையிலான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, சமூகவிரோத சக்திகள் நிலைமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன.
எனவே, அவசர பொது முக்கியத்துவம் கருதி உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
தவறான தகவல்களும், வதந்திகளும் சமூக ஊடகங்களின் வழியாக பரப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது.
அவசர பொது முக்கியத்துவம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டப் பிரிவு 2017-ன் கீழ், தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறது.
வரும் ஞாயிறு வரை ரத்து: பொது அமைதியைக் காத்திடும் வகையிலும், தவறான தகவல்களைத் தடுக்கும் விதத்திலும் புதன்கிழமை (மே 23) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 27) வரை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுமைக்கும் இணைதள சேவை ரத்து செய்யப்படுகிறது என தனது கடிதத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி தெரிவித்துள்ளார்.