தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுதவிர 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இவர்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த செல்வசேகர் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.