தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக மு.க. ஸ்டாலின், வைகோ, கமல் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டபவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மே 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி மருத்துவமனைக்கு சென்றதாக மு.க. ஸ்டாலின், வைகோ, கமல் உள்ளிட்ட 64 பேர் மீது ஐபிசி 143, 188, 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.