தூத்துக்குடிக்கு மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பக்கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சோகமான நிகழ்வை சந்தித்தது இல்லை. தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மிகக் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
போராட்டக்காரர்களை காவல்துறை உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளது. மருத்துவமனை பிணவறையில் எத்தனை உடல்கள் இருக்கின்றன என தெரியவில்லை. என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. மீனவ மக்கள் 200 பேரை காணவில்லை. இவ்வளவு நடந்தும் மக்கள், இளைஞர்கள் பயப்படவில்லை. தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தை அனுப்பினால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும்.
தூத்துக்குடிக்கு துணை ராணுவம் வந்தால் மக்களை ஈவு இறக்கம் இல்லாமல் சுட்டு கொல்லும். ஆகவே மத்திய அரசு துணை ராணுவத்தை தூத்துக்குடிக்கு அனுப்ப கூடாது என்றார்.