தமிழகத்தில் இந்த ஆண்டு 27 மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவிலேயே இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மழைக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவை உபயோகிக்கப்பட்டன.
இதையடுத்து, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறபட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு 2018 ஆம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
இதில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சராசரி அளவு மழை இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்த சராசரி மழை அளவானது நீண்ட கால சராசரியில் இருந்து (மைனஸ் அல்லது பிளஸ் ) 19 சதவீதமாகும். சராசரியைக் காட்டிலும் குறைவான மழை அளவு என்பது நீண்டகால சராசரியில் இருந்து மைனஸ் 20 முதல் மைனஸ் 59 சதவீதமாகும்.
சராசரி மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கோவை, சென்னை, ஈரோடு,கடலூர், மதுரை, தேனி, தருமபுரி,காஞ்சிபுரம், கன்னியாகுமரி,கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம்,நாகப்பட்டினம்,திருவாரூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை.
குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருப்பூர்.