தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
இச்சம்பத்தைக் கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 25) முழு அடைப்புப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.