ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவியிருப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார்.
அப்பாவி மக்களைப் பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே போராட்டத்தை மோசமான சூழ்நிலைக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் குறித்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அளித்த பேட்டி:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொது மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அமைதி காத்து, அறவழியிலேயே போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இந்த முறை சில எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில், சில சமூக விரோதிகள் ஊடுருவி, அப்பாவி மக்களைப் பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இப்போராட்டத்தை இன்றைக்கு ஒரு மோசமான சூழ்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்துள்ளோம்.
விரும்பத்தகாத சம்பவம்: தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் விரும்பத்தகாதது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை உத்தரவில், ஒரு பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது. ஆகவே, விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகவே இந்த 144 தடை உத்தரவே போடப்பட்டது. அங்கே அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப வேண்டும். பொது மக்கள் அச்சமில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
ஆனால், சில விஷமிகளும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் சுயநலத்துக்காக அப்பாவி மக்களைப் பயன்படுத்தி மோசமான சூழ்நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இப்படியொரு கலவரம் நடைபெறும் என்று தெரிந்திருந்தால், முன்னெச்சரிக்கையாகவே கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் போராட்டம் நடைபெறும் போது, அங்கே இருக்கிறவர்கள் அவர்களது உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைதியாக ஊர்வலம் செல்வார்கள். அரசு அதிகாரிகளிடம் தங்களுடைய குறைகளைச் சொல்லி பரிகாரம் பெற முற்படுவர். அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், அண்மையில் நடந்த பேரணியில் சில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூக விரோதிகளும் ஊடுருவி இதை ஒரு தவறான பாதையில் அழைத்துச் சென்ற காரணத்தினால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது.