பச்சையப்பா அறக்கட்டளைக்குச் சொந்தமான 4 கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பச்சையப்பா அறக்கட்டளைக்குச் சொந்தமான 6 கல்லூரிகள் உள்ளன. இவற்றிஸ் 4 கல்லூரிகளுக்கு முதல்வர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர்கள் ஸ்ரீதர், கருணாமூர்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளைப் பின்பற்றாமல் ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள 4 பேரை முதல்வர் பதவியில் நியமிக்க அவசரகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நியமனங்களில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த நீதிபதி, அறக்கட்டளைக்குச் சொந்தமான 4 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை மே 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.