காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும்
காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு எதிராக வழக்குரைஞர்கள் முத்துக்குமார், ரஜினி, கதிரேசன், சையது அப்துல் காதர், கே.கே.ரமேஷ், எழிலரசு, அழகர்சாமி உள்ளிட்டோர் சார்பில் 10க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. 
அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிடுகையில், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இணைய வசதி, மின் சேவை, போக்குவரத்து வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் உள்ளனர் என்றனர்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இணைய சேவைகளை ரத்து செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்து அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்துக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தோர் அதிகம் பேர் பங்கேற்றனர். இணையதளம் மூலம் தவறான தகவல்கள் பரவி வருவதால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இணைய சேவையை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து காயமடைந்தவர்களின் விவரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அரசு வழக்குரைஞர், கலவரத்தின்போது பொதுமக்கள் 72 பேரும், போலீஸார் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 26 பேருக்கு தலா ரூ.3 லட்சம், குறைந்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 53 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளனர். 141 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் தற்போது நிலவரம் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தீர்ப்புக்காக மாலைக்கு ஒத்திவைத்தனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பான உத்தரவை நீதிபதிகளிடம் அரசு வழக்குரைஞர் மாலையில் சமர்ப்பித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தூத்துக்குடியில் சனிக்கிழமை (மே 26) சீராய்வுக் குழுக் கூட்டத்தை கூட்டி நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும், இணைய சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பாக உரிய முடிவு எடுக்கவும் உத்தரவிட்டனர். மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக உடனடியாக அரசு முடிவு செய்யவும் உத்தரவிட்டனர்.
கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தினர் நேரில் சந்தித்து அவர்களது நிலை குறித்து விசாரிக்க வேண்டும். அதில் உயர் சிகிச்சை தேவைப்படுவோரை மதுரையில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். மருத்துவச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும். 
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை சட்டப் பணிகள் ஆணைக் குழு செய்ய வேண்டும். மாவட்ட முதன்மை நீதிபதி இதைக் கண்காணித்து ஜூன் 6இல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு, பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவற்றை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இம்மனுக்கள் குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலர், டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஜூன் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். சிபிஐ விசாரணை கோரும் மனுவுக்கு, சிபிஐ இயக்குநர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com