தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறினார்.
நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் இதுவரை 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளத்துக்கு வேலைக்காகவும், கோயில் தரிசனத்துக்காகவும் தமிழகத்தில் இருந்து சென்ற மூன்று பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது வெறும் வதந்தி என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தின் நிலை குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: திருச்சியில் அனுமதிக்கப்பட்டுள்ள யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, அதற்கான அறிகுறிகள்கூட இல்லை. அவர்களை பாதித்துள்ளது எந்த மாதிரியான காய்ச்சல் என்பது குறித்து கண்டறிவதற்காக ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்ட நிபா வைரஸ் பாதிப்புகளை ஆய்வு செய்தபோது, அந்த வைரஸானது பாதிப்பு ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் நிலவியுள்ளது. 4, 5 கி.மீ. பரப்பளைவைத் தாண்டி அவை பரவவில்லை. எனவே, தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தமிழகத்தில் யாருக்கும் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை
என்றார் அவர்.