சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவியினை அதிகரித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி போலீசாரின் துப்பாக்கிச் சூட்டினால் 13 பேர் மரணமடைந்தனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பின்னர் பலியானோர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்தது
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவியினை அதிகரித்து தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். முன்னதாக இது ரூ. 10 லட்சமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். முன்னதாக இது ரூ. 3 லட்சமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூட்டில் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். முன்னதாக இது ரூ.1 லட்சமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.