மீனவர்களின் நிபந்தனையால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக தூத்துக்குடியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சனிக்கிழமை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மீனவப் பிரதிநிதிகள், பங்குத்தந்தை நார்த்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு, பங்குத்தந்தை நார்த்டே செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் ஒரே கோரிக்கை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான். ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு ஆணை வெளியிட்டால் மட்டுமே துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்வோம். இல்லையெனில், ஸ்டெர்லைட் ஆலைக்காக அவர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள் என எடுத்துக் கொள்வோம் என்றார்.