ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் எண்ணத்துக்கு மாறாக தமிழக அரசு செயல்படாது என அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களின் எண்ணத்துக்கு மாறாக அதிமுக அரசு என்றைக்கும் செயல்படாது. இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருவதோடு, தூத்துக்குடியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால், அமைச்சர்கள் அங்கு செல்லவில்லையே தவிர, அமைச்சர்கள் அங்கு செல்ல அச்சமில்லை. மற்ற அரசியல் கட்சியினர் அரசியல் செய்வதற்காக அங்கு செல்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முன்னோட்டமாகத்தான் முதலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்களில் மின்சார வாரியத்துக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு மின் கட்டணப் பாக்கியுள்ளது. மானியக் கோரிக்கைகள் வரும்போது அந்தந்தத் துறைகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளனர் என்றார்.