ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அங்கு அமைச்சர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:
144 தடை உத்தரவு இருந்ததால், சட்டத்தை மதித்து தூத்துக்குடிக்கு வராமல் இருந்தேன். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பியது. 100 சதவீதம் பேருந்துகள் தூத்துக்குடியில் இயக்கப்படுகிறது.
மக்களின் உணர்வைப் போன்றுதான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என அரசும் இருக்கிறது. மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை நிறுத்தி ஸ்டெர்லைட் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளோம். ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
போராட்டம் நடத்திய மக்களுக்கு 98 நாட்களாக தமிழக அரசு பாதுகாப்பு அளித்தது. மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், வன்முறை ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில், 7 பேருக்கு பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 54 பேருக்கு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.