தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, ஆலையின் வாயில் கதவினைப் பூட்டி சீல் வைத்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் நந்துரி கூறியதாவது:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.
இது நிரந்தரமான ஒன்றாகும். இனி ஆலை செயல்படாது.
ஆலையின் உள்ளே பொது மக்கள் யாரும் செல்வதைத் தடுக்கும் வகையில் சங்கிலி போட்டு பூட்டப்பட்டுள்ளது.
இனி அடுத்த கட்ட நடவடிக்கையினை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்தான் எடுக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.
அவர்கள் அங்கிருக்கும் இயந்தரங்களை ஆய்வு செய்து, அவற்றை சீல் வைக்க வேண்டியதன் அவசியத்தினை ஆராய்வார்கள்
தூத்துக்குடி மக்களின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.