சென்னை: மக்களின் விருப்பப்படியே ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடபட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை சற்று முன்பு வெளியிட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்களன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
மக்களின் விருப்பப்படியே ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வலியுறுத்திய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வேண்டுகோளையும் பரிசீலனை செய்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆலை தற்பொழுது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
தூத்துக்குடியில் இயல்பான அமைதி நிலை திரும்ப மக்கள் அனைவரின் ஒத்துழைப்பினை கோருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார் .