சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயம் பட்டுள்ளவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற, நடிகர் ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு திங்களன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, ஆலையின் வாயில் கதவினைப் பூட்டி சீல் வைத்தார்
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயம் பட்டுள்ளவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற, நடிகர் ரஜினிகாந்த் புதனன்று தூத்துக்குடி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் பிரவேசம் செய்யப் போவதாக அறிவித்த பின்னர் மக்கள் பிரச்னை ஒன்றுக்காக ரஜினி களம் இறங்கப் போவது இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.