சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் முதல் தவணையாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று, இது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவர்களில் 7 பேரின் உடல்கள் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. எனவே மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய அரசு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது.
இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் மீதமுள்ள உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர்.
அத்துடன் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை, நீதிமன்ற வழிகாட்டுதல்படி மறு பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.