சென்னை: சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியின் பொழுது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடந்த பொழுது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஐ.பி.எல்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரும் போராட்டம் நடந்தது. அப்பொழுது பணியில் இருந்த காவலர் ஒருவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கடுமையாகத் தாக்கினார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. போலீசார் தனிப்படை அமைத்து அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மதன்குமாரை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.
திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்ட மதன்குமார் எண்ணூரைச் சேர்ந்தவர் ஆவார். அவர் மீது நான்கு வழக்குகளை போலீசார் அப்பதிவு செய்திருந்தனர். அதில் ஒரு வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற்று உள்ளார். மீதமுள்ள 3 வழக்குகளில் அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.