திருடப்பட்ட தஞ்சை பெரிய கோவில் சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்பு 

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
திருடப்பட்ட தஞ்சை பெரிய கோவில் சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்பு 

சென்னை: தஞ்சை பெரிய கோவிலில் இருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தஞ்சை பெரியகோவில் காப்பகத்தில் 13 பஞ்சலோக சிலைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் ராஜராஜ சோழன் சிலை (உயரம் 75 செ.மீ.) மற்றும் அவரது பட்டத்து இளவரசி ராணி லோகமாதேவி சிலை (உயரம் 55 செ.மீ.)  ஆகிய இரு சிலைகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆனால் இவை இரண்டும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சுவாமிநாதன் சமீபத்தில் புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் முதலில் தஞ்சை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். அதில் குறிப்பிட்ட இரு சிலைகளும் பெரியகோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் 2 சிலைகளின் மதிப்பும் ரூ. 100 கோடிக்கு மேல் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடந்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சிலை குஜராத்தில் உள்ள,  தாராபாய் அருங்காட்சியகம் என்னும் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் குஜராத்தில் உள்ளத்தில் உள்ள ராஜராஜ சோழன் சிலை மற்றும், லோகமாதேவி சிலைகளை மீட்பதற்கு தேவையான தகவல்களையும், ஆதாரங்களையும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிரமாக சேகரித்தனர். பிறகு சிலை தடுப்பு பிரிவு போலீசார் சிலைகள் குறித்து சரியான தகவல்களை குஜராத் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட 2 சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிலைகள் தான் என்பது உறுதியானவுடன், அருங்காட்சியக நிர்வாகம் இரு சிலைகளையும் சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சிலைகள் அங்கிருந்து ரெயில் மூலம் வியாழனன்று  சென்னை கொண்டுவரப்பட்டது. அமைச்சர பாண்டியராஜன் சிலைகளை மீட்டு வந்த குழுவினரை  வரவேற்றார். விரைவில் சிலைகள் தஞ்சை  பெரிய கோவில் காப்பகத்தில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com