தீக்காயத்துக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடு: சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தகவல்

தீபாவளியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை
தீக்காயத்துக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடு: சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தகவல்


தீபாவளியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக அரசின் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் 29 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 155 தாலுகா மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளில் தீபாவளியையொட்டி, தீக்காய சிகிச்சைக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: தீபாவளியின்போது, தகுந்த பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கையாக பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசினால் தீ விபத்து நிகழ்ந்தால் உடனடியாக 108 உதவி மையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தீக்காயத்தின் மீது பேனா மை, ஆயில், அரிசி மாவு ஆகியவை ஊற்றக் கூடாது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் ஆகியவற்றில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தீக்காயத்துக்கான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், டெங்கு, பன்றிக் காய்ச்சலில் பாதிக்கப்படுவோருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்கள்: தீபாவளியையொட்டி, மாநிலம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ள 936 ஆம்புலன்ஸ்களும், 41 இருசக்கர வாகன மருத்துவ ஊர்திகளும் வியாழக்கிழமை வரை (நவ. 8) முழுவீச்சில் இயக்கப்பட உள்ளன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், அதிகமாக மருத்துவத் தேவை என கண்டறியப்பட்ட பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அவசரகால அழைப்புகளைக் கையாள 108 மையக் கட்டுப்பாடு அறையில் முழுமையான அளவில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
24 மணி நேரமும் மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளவும், மருத்துவ ஆலோசனை பெறவும் 104 மருத்துவ உதவி மையமும் தயார் வைக்கப்பட்டுள்ளது சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com