உச்ச நீதிமன்றம் அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2176 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவு செய்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
தீபாவளி பண்டிகை நேற்று (செவ்வாய்கிழமை) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 2176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.