சென்னை: சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் தரப்படுவதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று வெளியாகியுள்ளது.
விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரம் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளும் அதிமுக அரசை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் திரையரங்கங்களின் முன்பு அதிமுகவினர் கடுமையான போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அதிமுகவினரின் கடும் எதிர்ப்பை அடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்புத் தரப்பு ஒப்புதல் அளித்துள்ளதாகத் வியாழன் இரவு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் தரப்படுவதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.