திரைப்படங்களில் கொள்கைகளை மட்டுமே நடிகர்கள் பேச வேண்டும். அடுத்தவர்களைப் பேசி அவர்களின் மனங்களைப் புண்படுத்தக் கூடாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அரசியலைக் கலந்து திரைப்படம் எடுப்பது நடிகர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அவர்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது. ஜெயலலிதா இருக்கும் போது இதுபோன்ற கருத்துகள் வந்தது உண்டா? அவர் இருக்கும் போது இதுபோன்ற படத்தை எடுத்திருந்தால் உண்மையிலேயே நாங்கள் பாராட்டியிருப்போம்.
எம்.ஜி.ஆர். போன்று...சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது போன்று ஒரு திரைப்படம் என்பது மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்கின்ற கருவியாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் எம்.ஜி.ஆர். படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால், இப்போது திரைத்துறையில் உள்ள சிலர் எம்ஜிஆர் போன்று மாறி விடலாம் என எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பெயரை ஏன் வைக்க வேண்டும்.
மறைந்த முதல்வர் குறித்து வேண்டுமேன்றே காழ்ப்புணர்ச்சியுடன் பெயரை வைத்துள்ளார்கள். இது இழிவுப்படுத்தும் செயல்தானே? மனதைப் புண்படுத்தும் செயலை எப்படியும் ஏற்றுக்கொள்ள முடியாது.