கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு, வைரஸ், மூளை, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் முத்துகுமாருக்கு (52), பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
பொள்ளாச்சி, சித்தூரைச் சேர்ந்தவர் ரத்தினம் (60). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கோவை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி, ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் (52) மூளைக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புதன்கிழமை உயிரிழந்தார். ஈரோடு, திண்டல் புதுக் காலனி, பி.கே.என்.நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் முத்துசாமி (62). வைரஸ் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு 9 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 84 பேரும் என மொத்தம் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.