சர்கார் பட விவகாரம்: போராட்டம் கண்டனத்திற்குரியது - ரஜினிகாந்த்

தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, சில காட்சிகளை நீக்க வேண்டும் என போராட்டம் நடத்துவதும் திரையிட தடுப்பதும் சட்டத்திற்கு
சர்கார் பட விவகாரம்: போராட்டம் கண்டனத்திற்குரியது - ரஜினிகாந்த்


சென்னை: தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, சில காட்சிகளை நீக்க வேண்டும் என போராட்டம் நடத்துவதும், திரையிட தடுப்பதும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சர்கார்’.  இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலிலும் சாதனைப் படைத்து வருகிறது. 

"சர்கார்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் நேற்று வியாழக்கிழமை (நவ.8) போராட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்குகளில் அக்கட்சியினர், அந்த திரைப்படத்தின் பேனர், நடிகர் விஜய் கட்-அவுட்டுகளை சேதப்படுத்தினர்.

 "சர்கார்' திரைப்படத்தில் அதிமுகவை விமர்சனம் செய்தும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்தும் காட்சிகள் இருப்பதாக அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் சிலர் எச்சரிக்கையும் விடுத்தனர். இந்த விவகாரம் நேற்று வியாழக்கிழமை விஸ்வரூம் எடுத்தது.

மாநிலம் முழுவதும் "சர்கார்' திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டனர். சில இடங்களில் அந்த திரைப்படத்துக்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் கிழிக்கப்பட்டன. நடிகர் விஜய் கட்-அவுட்களும் உடைக்கப்பட்டன. குறிப்பாக கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இச்சம்பவங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக பல திரையரங்குகளில் சர்கார் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

மேலும், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது அதிமுகவினர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.  

சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த "சர்கார்' திரைப்பட பேனர்களை அதிமுகவினர் கிழித்தெறிந்தனர். அதேபோல அங்கிருந்த நடிகர் விஜய் கட்-அவுட்டுகளையும் அதிமுகவினர் உடைத்தனர். 

 மாநிலம் முழுவதும் சர்கார் திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் நடைபெற்ற இப்போராட்டங்களினால், பரபரப்பு ஏற்பட்டது.

சர்கார் திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில்  போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில், திரையரங்களுக்கு மேலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நிலைமை சீராகும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதனிடையே, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு போலீஸார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்காகவே போலீஸார் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சர்கார் திரைப்படத்தை திரையிட தடுப்பதும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com