தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பொருத்தே சட்டப் பேரவைச் செயலகம் தனது நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தத் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தகுதி நீக்கம் செய்த பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எப்போது காலியாகும்?: இதனிடையே, 18 தொகுதிகள் எப்போது காலியானதாக அறிவிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் 30 நாள்கள் அவகாசம் உள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு கடந்த 25-ஆம் தேதி வெளியான நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு குறித்து அறிந்த பிறகே அதாவது அவர்கள் மேல்முறையீடு செய்யப் போகிறார்களா இல்லையா என்பதை அறிந்த பிறகே தொகுதிகள் காலியானது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
18 எம்.எல்.ஏ.க்கள் முறையீடு செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததும், காலியாகும் தொகுதிகள் குறித்த விவரங்கள் பேரவைச் செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பேரவைச் செயலகத்தின் அறிவிப்பை ஏற்று, காலியான தொகுதிகளுக்குத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவிக்கும். பேரவைச் செயலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியான உடனேயே இடைத் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.